Breaking News

ஆழியாறு ஒட்டன்சத்திரம் ஒப்பந்தப்புள்ளி ரத்து


ஆழியாறு ஒட்டன்ச்சத்திரம் ஒப்பந்தப்புள்ளி ரத்து
பொள்ளாச்சி, நவ.21-
ஆழியாறு -ஒட்டன்சத்திரம் தண்ணீர் கொண்டு செல்லும் திட்டத்திற்கு கோரப்பட்ட ஒப்பந்தப்புள்ளி ரத்து செய்யப்பட்டுள்ளது.
பிஏபி திட்டத்தில் நீர்ப்பற்றாக்குறை உள்ள நிலையில் ஆழியாறு அணையில் இருந்து ஒட்டன்சத்திரம் தண்ணீர் கொண்டு செல்லும் திட்டத்தை தமிழக அரசு அறிவித்தது. இந்த திட்டத்திற்கு கோவை, திருப்பூர் மாவட்ட விவசாயிகள் கடுமையான எதிர்ப்பு தெரிவித்தனர். கேரளாவிலும் திட்டத்தை கைவிடக்கோரி தொடர் போராட்டங்கள் நடைபெற்றது. பொள்ளாச்சியில் பரம்பிக்குளம்-ஆழியாறு திட்ட நீர் பாதுகாப்பு கூட்டமைப்பும் உருவாக்கப்பட்டது. தமிழகத்திலும் கவன ஈர்ப்பு போராட்டங்கள் நடைபெற்றது. திருப்பூரில் விவசாயிகளின் ஊர்வலம் நடைபெற்றது. ஆழியாறு அணையிலிருந்து ஒட்டன்சத்திரத்திற்கு தண்ணீர் கொண்டு செல்லும் திட்டத்திற்கு கடுமையான எதிர்ப்பு எழுந்ததால் அரசு சார்பில் விவசாய பிரதிநிதகளை அழைத்து பேச்சு நடத்தப்பட்டது. பேச்சுவாரத்தையில் அரசு சார்பாக நீரவளத்துறை அமைச்சர் துரைமுருகன், அமைச்சர் கே.என்.நேரு மற்றும் அதிகாரிகள் பங்கேற்றனர். விவசாய பிரதிநிதிகள் சார்பில் மெடிக்கல் பரமசிவம் தலைமையில் ஒரு குழுவினர் பங்கேற்றனர். பேச்சுவார்த்தையில் பிஏபி விவசாயிகளின் அனுமதியில்லாமல் ஆழியாறு ஒட்டன்சத்திரம் திட்டம் நிறைவேற்றப்படாது என உறுதியளிக்கப்பட்டது. இந்நிலையில், திட்டத்திற்கான ஒப்பந்தப்புள்ளி கோரப்பட்டது. ஆனால், விவசாயிகளின் எதிர்ப்பு காரணமாகவும், பல்வேறு காரணங்களினாலும் யாரும் ஒப்பந்தம் கோரவில்லை. இந்நிலையில், திட்டத்தை மறுபரிசீலனை செய்ய அரசு முடிவு செய்துள்ளது. திட்டம் மறுபரிசீலனை செய்யப்படவுள்ளதால், ஒப்பந்தப்புள்ளிகள் ரத்து செய்யப்பட்டுள்ளது.
 ஒப்பந்தப்புள்ளிகள் ரத்து செய்யப்பட்டுள்ளதால் பிஏபி விவசாயிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனர். அரசுக்கும், விவசாயிகளுக்கு ஆதரவாக இருந்த அனைவருக்கும் விவசாயிகள் சார்பில் மெடிக்கல் பரமசிவம், ஆழியாறு பாசன சபை நிர்வாகி செந்தில் மற்றும் பல்வேறு விவசாய பிரதிநிதிகள் நன்றி தெரிவித்துள்ளனர்.

---

No comments