மாசாணியம்மன் குண்டம் விழாவிற்காக 80 அடி உயர கொடிமரம் கொண்டுவரப்பட்டது
மாசாணியம்மன் குண்டம் விழாவிற்காக 80 அடி உயர கொடிமரம் கொண்டுவரப்பட்டது
பொள்ளாச்சி, பிப்.9
மாசாணியம்மன் கோயில் குண்டம்விழாவிற்காக செவ்வாய்க்கிழமை 80 அடி உயர கொடிமரம் கொண்டுவரப்பட்டது.
கோவை மாவட்டம், ஆனைமலை மாசாணியம்மன் கோயில் மிகவும் பிரசித்திபெற்றது. மாசாணியம்மன் கோயிலுக்கு உள்ளூர் மட்டுமின்றி வெளியூர்களில் இருந்தும் பக்தர்கள் தரிசனத்திற்காக வந்துசெல்வார்கள். வெள்ளி, சனி, ஞாயிறு மற்றும் விஷேச நாட்களில் பக்தர்கள் கூட்டம் அதிக அளவில் இருக்கும்.
ஒவ்வொரு
ஆண்டும் நடைபெறும் குண்டம் விழா விமர்சையாக நடைபெறும். தை அமாவாசையில்
கொடியேற்றத்துடன் துவங்கும். இந்த ஆண்டு வரும் 11ம் தேதி தை அமாவாசையில்
குண்டம் விழா துவங்கவுள்ளது.
இதற்காக செவ்வாயக்கிழமையன்று
சேத்துமடை பகுதியில் இருந்து 80 அடி உயரமுள்ள மூங்கில் கொடிமரத்தை வெட்டி
எடுத்துவர பக்தர்கள் சென்றனர். மூங்கில் கொடிமரத்தை வெட்டி எடுத்துவந்து
சர்க்கார்பதி பகுதியில் உள்ள வனதேவதை கோயிலில் வைத்து சிறப்பு பூஜைகள்
செய்யப்பட்டது.
அதற்கு பிறகு பல கிலோ மீட்டர் தூரம் பக்தர்கள் கொடிமரத்தை தோளில் சுமந்துவந்து மாசாணியம்மன் கோயில் அருகே உள்ள ஆற்றில் குளிப்பாட்டி அதற்கு சந்தனம், மலர் மாலை அணிவித்து சிறப்பு பூஜைகள் செய்து கோயில் வளாகத்தை வைத்தனர். இந்த கொடிமரம் 11ம் தேதி காலை முக்கிய வீதிகள் வழியாக எடுத்துச்செல்லப்பட்டு கோயில் கோபுரம் முன்பு நிலை நிறுத்தப்படும்.
கொடிமரம் எடுத்துவரும் பணியில் ஆனைமலை முன்னாள்
பேரூராட்சித்தலைவரும் மாசாணியம்மன் நற்பனிமன்ற தலைவருமான
சாந்தலிங்ககுமார், கோயில் தலைமை முறைதாரர் மனோகரன், அருளாளி அருண் உட்பட
பலர் இருந்தனர்.
24ம் புதன்கிழமை நள்ளிரவு மயானபூஜையும், 25ம்
தேதி சக்தி கும்பஸ்தாபனம், மகாபூஜை நடைபெறவுள்ளது. 26ம் தேதி இரவு குண்டம்
பூ வளர்த்தலும், 27ம் தேதி காலை 8.30 மணிக்கு குண்டம் இறங்குதலும்
நடைபெறவுள்ளது. 28ம் தேதி கொடி இறக்குதல், மார்ச் 1ம் தேதி அபிஷேக
பூஜையுடன் குண்டம் விழா நிறைவுபெறுகிறது.
வெள்ளிக்கிழமை குண்டம் விழா
குறித்த ஆலோசனைக்கூட்டம் கோயில் அலுவலகத்தில் உதவி ஆணையர் கருணாநிதி,
கண்காணிப்பாளர் அருண்பிரகாஷ் முன்னிலையில் நடைபெற்றது. விழாவிற்காக
ஏற்பாடுகளை கோயில்நிர்வாகத்தினர், கோயில் முறைதாரர்கள், விழாக்குழுவினர்
செய்துவருகின்றனர்.


No comments