Breaking News

பொள்ளாச்சியில் தனியார் மருத்துவமனை மருத்துவர்கள் வேலை நிறுத்தம்

 






பொள்ளாச்சி, டிச.11
 ஆயுர்வேத மருத்துவர்களும் அறுவை சிகிச்சை செய்யலாம் என்ற மத்திய அரசின் அறிவிப்பை எதிர்த்து பொள்ளாச்சியில் தனியார் மருத்துவமனை மருத்துவர்கள் வெள்ளிக்கிழமை 11ம் தேதி வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டு உள்ளதால் பெரும்பாலான மருத்துவமனைகள் மருத்துவர்கள் இன்றியும் நோயாளிகள் இன்றியும் வெறிச்சோடி காணப்படுகின்றன.

  அலோபதி மருத்துவர்கள் போன்றே ஆயுர்வேத மருத்துவர்களும் அறுவை சிகிச்சை செய்யலாம் என்ற மத்திய அரசின் அறிவிப்பை எதிர்த்து பொள்ளாச்சியில் தனியார் மருத்துவமனை மருத்துவர்கள் இன்று காலை 6 மணி முதல் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளனர். இதனால் பொள்ளாச்சியில் பெரும்பாலான தனியார் மருத்துவமனைகள், மருத்துவர்கள் இன்றியும், நோயாளிகள் இன்றியும் வெறிச்சோடி காணப்படுகின்றன.மருத்துவமனைகள் முன்பு சிரமத்திற்கு வருந்துகிறோம் இன்று வேலை நிறுத்தம் என துண்டுப் பிரசுரங்களும் ஒட்டப்பட்டுள்ளது.

 இது குறித்து பொள்ளாச்சி ஐஎம்ஏ தலைவர் கோபால்சாமி மற்றும் செயலாளர் செந்தில்குமார் ஆகியோர் அறிக்கை...

கடந்த நவம்பர் 19ம் தேதி மத்திய அரசு, அரசு இதழில் அலோபதி மருத்துவர்கள் செய்து வந்த அறுவை சிகிச்சைகளை இனி ஆயுர்வேத மருத்துவர்கள் செய்யலாம் என்று அறிவித்துள்ளனர்.
 மேலும், நிதியோக் அமைப்பு நான்கு குழுக்களை அமைத்து கல்வி, சுகாதாரமுறைகள், மருத்துவ ஆராய்ச்சி, மருத்துவ பயிற்சி ஆகிய எல்லாத்துறைகளையும் அதாவது நவீன மருத்துவம், ஆயுஷ் கலந்த ஒரே முறையை கொண்டுவர அமைத்துள்ளது.
 இந்த முறை பொதுமக்களை பெரிதும் பாதிக்கும். தேசிய கல்விக்கொள்கையின் மூலம் பள்ளிக்கல்வியிலும், மருத்துவ படிப்பிலும் பல்வேறு மாறுதல்கள் செய்யப்பட்டுள்ளது. இந்த தேசிய கல்வி கொள்கையின் மூலம் ஆயுஷ்  மருத்துவ முறையை பயின்ற மருத்துவ மாணவர்கள் அவர்களுடைய விருப்பம்போல் அலோபதி மருத்துவமுறையை பயின்றுகொள்ளலாம் என்ற அறிவிப்பும் வெளியிடப்பட்டுள்ளது. இதன்மூலம் மருத்துவத்துறை பாதிக்கப்படும்.
 இந்த அறிவிப்புகளுக்கு எதிர்ப்பு தெரிவித்து இன்று காலை 6 மணி முதல் மாலை 6 மணி வரை சிகிச்சைகளை தவிர்த்து வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளோம். அவசர சிகிச்சைகள் மட்டும் அளிக்கப்படும் என்றனர்.

No comments