பொள்ளாச்சியில் கனிமொழி தலைமையில் 10ம் தேதி திமுக கூட்டணி கட்சியினர் ஆர்ப்பாட்டம்
பொள்ளாச்சியில் கனிமொழி தலைமையில் 10ம் தேதி திமுக கூட்டணி கட்சியினர் ஆர்ப்பாட்டம்
பொள்ளாச்சி, ஜன.7
பொள்ளாச்சி பாலியல் வழக்கில் முக்கிய நபர்கள் லவகைது செய்ய வலியுறுத்தியும் வரும் 10 தேதி திமுக எம்.பி கனிமொழி தலைமையில் ஆர்ப்பாட்டம் நடத்த திமுக கூட்டணி கட்சியினர் முடிவு செய்துள்ளனர்.
பொள்ளாச்சி பாலியல் வழக்கு தொடர்பாக செவ்வாய்க்கிழமை பொள்ளாச்சியை சேர்ந்த பாபு, ஹெரோன், அருளானந்தம் உட்பட மூன்று பேரை சிபிஐ போலீஸார் கைது செய்தனர்.
இந்நிலையில், பொள்ளாச்சி பாலியல் வழக்கு சம்பந்தமாக பொள்ளாச்சியில் திமுக கூட்டணி கட்சி ஆலோசனை கூட்டம் வியாழக்கிழமை நடைபெற்றது. கூட்டத்தில் திமுக, மதிமுக, கொங்குநாடு மக்கள் தேசிய கட்சி, ஜனநாயக மாதர் சங்கம், கம்யூனிஸ்ட், காங்கிரஸ் உள்ளிட்ட பல்வேறு கட்சிகள் மற்றும் பல்வேறு அமைப்புகளைச் சேர்ந்த நிர்வாகிகள் பங்கேற்றனர்.
இந்த கூட்டத்தில், பொள்ளாச்சி பாலியல் வழக்கில் தொடர்புடைய அனைத்து குற்றவாளிகளுக்கும் கடுமையான தண்டனை வாங்கித் தரவேண்டும் என்றும், குற்றவாளிகளுக்கு பின்புலமாக இருக்கும் முக்கிய நபர்களை சிபிஐ அதிகாரிகள் கைது செய்ய வேண்டும் என்றும், இந்த பாலியல் வழக்கில் மெத்தனமாக செயல் பட்டதோடு, பாதிக்கப்பட்ட பெண்ணின் பெயர் மற்றும் முகவரி ஆகியவற்றை வெளியிட்ட காவல்துறை அதிகாரிகள் மீதும் உரிய விசாரணை நடத்தி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் தீர்மானிக்கப்பட்டது.
மேலும் இந்த வழக்கில் தொடர்புடைய முக்கிய நபர்களை கைது செய்ய வலியுறுத்தி வரும் 10ஆம் தேதி பொள்ளாச்சி காந்தி சிலை முன்பு திமுக எம்.பி., கனிமொழி தலைமையில் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தவும் கூட்டத்தில் தீர்மானிக்கப்பட்டது.

No comments