Breaking News

உழைத்து வாழ்வது தமிழரின் அடையாளம். அமைச்சர் டிஆர்பி ராஜா பெருமிதம்




உழைத்து வாழ்வது தமிழரின் அடையாளம் என தொழில்துறை அமைச்சர் டிஆர்பி ராஜா பெருமிதமாக பேசினார்.
 பொள்ளாச்சி திருவிழாவின் ஒரு பகுதியாக வணிக பிரதிநிதிகள் சந்திப்பு பொள்ளாச்சி தனியார் மண்டபத்தில் நடைபெற்றது. பொள்ளாச்சி திருவிழா ஒருங்கிணைப்பு குழு தலைவர் எம்கேஜி ஆனந்தகுமார் வரவேற்றார். தமிழக தொழில்துறை அமைச்சர் டிஆர்பி ராஜா குத்துவிளக்கேற்றி நிகழ்ச்சியை துவக்கி வைத்தார். ராம்ராஜ்காட்டன் உரிமையாளர் நாகராஜன், அடையார் ஆனந்தபவன் உரிமையாளர் சீனிவாசராஜா, சார்-ஆட்சியர் கேத்திரன் சரண்யா, சர்வதேச வணிக நெட்வொர்க் நிர்வாகி முகமது நாசர் ஆகியோர் பங்கேற்று பேசினர்.
 நிகழ்ச்சியில் அமைச்சர் டிஆர்பி ராஜா பேசியது....தொழில்முனைவோருக்கான முக்கிய இடமாக கோவை உள்ளது. இந்திய அளவில் பல்வேறு தொழில்கள் செய்வதில் தமிழம் சிறந்த மாநிலமாக இருப்பதற்கு காரணம் தமிழகத்தில் உள்ளவர்கள் தங்கள் பணிகளை நேசித்து செய்வார்கள். உழைத்து வாழ்வது தமிழரின் அடையாளமாக உள்ளது. எலக்ட்ரானிக் பொருட்கள் ஏற்றுமதியில் தமிழகம் சிறப்பாக செயல்படுகிறது. இந்திய அளவில் 70 சதவீதம் பேட்ரி பைக்குள் தமிழகத்தில் உற்பத்தி செய்யப்படுகிறது. 40 சதவீதம் நான்கு சக்கர வாகனங்கள் உற்பத்தி செய்யப்படுகிறது. உயர் கல்வி படிப்பவர்கள் எண்ணிக்கை தமிழகத்தில் 52 சதவீதமாக உள்ளது. ஆனால், அமெரிக்காவில் 40 சதவீதம் மக்கள் மட்டுமே உயர் கல்வி படிக்கின்றனர். தரம், நம்பிக்கை போன்றவை உள்ளதால் முதலீட்டாளர்கள் தமிழகத்தை தேடிவருகிறார்கள் என்றார்.
நிகழ்வில், தொழில்வர்த்தக சபைத்தலைவர் வெங்கடேசன், திமுக நகர செயலாளர் நவநீதகிருஷ்ணன், நகராட்சித்தலைவர் சியாமளாநவநீதகிருஷ்ணன், முன்னோடி விவசாயி நித்தியானந்தன் உட்பட பலர் பங்கேற்றனர்.

----

No comments