Breaking News

பரம்பிக்குளம் அணையில் இருந்து உபரி நீர் வெளியேற்றம்

பரம்பிக்குளம் அணை முழு கொள்ளளவை எட்டியதை அடித்து புதன்கிழமை உபரி நீர் திறக்கப்பட்டது. 
பரம்பிக்குளம்- ஆழியாறு எனும் பிஏபி திட்டத்தில் உள்ள ஒன்பது தொகுப்பு அணைகளில் பரம்பிக்குளம் அணை அதிக கொள்ளளவு கொண்டது ஆகும். இந்த அணை 17.82 டிஎம்சி  கொள்ளளவு கொண்டது. இந்த அணை ஒருமுறை நிரம்பி விட்டால் ஒரு ஆண்டுக்கு பாசனம் மற்றும் குடிநீருக்கு பற்றாக்குறை இருக்காது. இந்த ஆண்டு தென்மேற்கு பருவமழை கை கொடுத்ததால் பிஏபி திட்டத்தில் உள்ள தொகுப்பணைகள் அனைத்தும் நிரம்பியுள்ளன. பரம்பிக்குளம் அணை கடந்த சில நாட்களுக்கு முன்பே நிரம்பினாலும் அணைக்கு நீர்வரத்து குறைவாக இருந்ததால் அணையிலிருந்து உபரி நீர் வெளியேற்றப்படவில்லை. தற்போது மழைப்பொழிவு உள்ளதால் அணைக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது. இதனால் புதன்கிழமை காலை அணையில் இருந்து மதகுகள் வழியாக உபரி நீர் திறக்கப்பட்டது. அணையில் இருந்து வினாடிக்கு 3000 கன அடி தண்ணீர் உபரி நீராக வெளியேற்றப்படுகிறது. 
நீர் திறப்பின் போது கண்காணிப்பு பொறியாளர் கார்த்திகேயன், செயற்பொறியாளர் சிவக்குமார், உதவி செயற்பொறியாளர் ஜெயக்குமார், உதவி பொறியாளர்கள் தியாகராஜன்(பரம்பிக்குளம் அணை) சங்கீதா ஆகியோர் இருந்தனர். தொடர்ந்து அதிகாரிகள் அணைகளை கண்காணித்து வருகின்றனர்.

No comments